இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு வளர்தமிழ்புல முதன்மையர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் தலைமை வகித்து உரையாற்றினார். மொழிபெயர்ப்புத் துறையின் தலைவரும், ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான முனைவர் இரா.சு.முருகன் அனைவரையும் வரவேற்றார். மேலும் விருந்தினர்களைப் புல முதன்மையரவர்கள் சிறப்பு செய்து கெளரவித்தார்கள். நன்றியுரையை மொழிபெயர்ப்புத் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் சா.விஜயராஜேஸ்வரி அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து முதலாம் அமர்வின் முதல் உரையை மாட்சிமை தங்கிய மன்னர் அரசுக் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் சு.கணேசன் “திருக்குறள் மொழிபெயர்ப்பு” எனும் தலைப்பில் வழங்கினார். அவர் தனது கருத்தில் திருக்குறளை எவ்வாறு மொழிபெயர்ப்பாளர்கள் மூலநூலுக்கு விசுவாசமாக மொழிபெயர்த்தனர் என உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது உரையை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ப.தியாகராஜன் “அவ்வையாரின் மூதுரை – நீதிநூலும் மொழிபெயர்ப்பும்” எனும் தலைப்பில் செம்மையாக எடுத்தியம்பிருந்தார்.
இதில் இவருடைய கருத்தின் படி மொழிபெயர்ப்பும் தமிழ் இலக்கியமும் இணைந்து வளர்ச்சியடைந்திருந்ததை மூதுரையின் வழியாக தெளிவுபடுத்தினார். தொடர்ந்து முனைவர் எம்.எம்.ஜெயசீலன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முதுநிலை விரிவுரையாளர் “சிங்கள மொழியில் தமிழ் நீதிநூல்கள்” எனும் தலைப்பில் அவருடைய கருத்தின்படி தமிழ்நாட்டிலிருந்து சென்ற பெளத்த துறவிகளால் சிங்கள மொழியில் ஜாதகக் கதைகள் மற்றும் தூதுப் பாடல்களில் அறநெறிக்கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதை தெளிவுப்படுத்தினார்.
மதியநேர உணவு இடைவேளையைத் தொடர்ந்து மாலைநேர அமர்வு இணைய வழியினாக ஆரம்பமானது. முதலாவதாக மொழிபெயர்ப்புத் துறையின் இணைப் பேராசிரியரும், இணை ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் ப.இராஜேஷ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முதலாவதாக இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான முனைவர் ச.க.கண்ணதாஸ் அவர்கள் “தமிழ் அறநெறி இலக்கியங்களை மொழிபெயர்ப்பதில் ஜி.யு.போப் கையாண்ட மொழிபெயர்ப்பு உத்திகளும் நுட்பங்களும் – திருக்குறள் மற்றும் நாலடியாரை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” எனும் தலைப்பில் எடுத்துரைத்திருந்தார்.
இதில் அவர் ஜி.யு.போப் கையாண்ட மொழிபெயர்ப்பு உத்திகளான கருத்தை விரித்துக் கூறுதல் சொல்லுக்கு சொல் மொழிபெயர்த்தல் போன்றவற்றை இலாவகமாகக் கையாண்டுள்ளார் என்பதை உதாரணங்கள் வாயிலாகக் கூறினார். அவரது உரையை தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின் விரிவுரையாளர் மதுரா சிவகுமரன் “மொழிபெயர்ப்பின் அறநெறிகள்” எனும் தலைப்பில் மொழிபெயர்ப்பு அறநெறிகள் எவ்வாறு தமிழ் அறிவியல் நூல்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக்கூறினார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வின் நன்றியுரையை மொழிபெயர்ப்புத் துறையின் முனைவர்ப்பட்ட ஆய்வாளர் செல்வி ஷேளினா சிவனேசன் வழங்கினார். இக்கருத்தரங்கை முனைவர்ப்பட்ட ஆய்வாளர்களான அ.வளவராஜ், திருமதி பா.ரேவதி, ஆகியோர் மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
No comments:
Post a Comment