தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அடைக்கல மாதா கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகரப் பகுதியில் அடைக்கல மாதா கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா முன்னிட்டுகடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு பேரருட் தந்தை செபாஸ்டின் பெரியண்ணன் தலைமை வகித்தார்.
ஏப்ரல் 27 -இல் தொடங்கி தினமும் ஜெப மாலை மற்றும் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தேர்த்திருவிழாவை ஒட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், அடைக்கல மாதாவின் சிலை அலங்கரித்த வாகனத்தில் வைக்கப்பட்டு வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
இந்த ஊர்வலம் தஞ்சாவூர் நகர முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் பொது மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பூ, மாலை, கற்கண்டு, மிளகு, மெழுகுத் திரிகளை வழங்கி அடைக்கல மாதாவை வழிபட்டனர். தொடர்ந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அடைக்கால மாதா ஆலய பங்குத்தந்தை ஜெயராஜ், அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment